http://sivathamiloan.blogspot.com/2009/11/blog-post.html
சிவத்தமிழோன் என்ற நண்பர் தன் வலைப்பதிவில் திருவள்ளுவர் திருவுள்ளம் சைவம் என்று மிக நன்றாகவே எழுதியிருந்தார். படித்தவுடன் ஒவ்வொருக் கருத்துக்கும் என்னுடைய பின்னூட்டை எழுதலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால்,சில பின்னூட்டுக்கள் மற்றும் கொடுத்து அவரின் பதில் எவ்வாறு அமைகிறது என்று பார்க்க நினைத்தேன். பதில்கள் யான் எதிர்ப்பாத்த மாதிரிதான் இருந்தன. அவரிடம் பின்னூட்டு தொடர்வதில் பயன்னில்லை, ஆதலின், என் கருத்தை ஈண்டு பொதுவாக முன் வைக்கிறேன்!
தமிழ்க் குழுமங்களில் நிறைய முறை திருக்குறள் பற்றி அலசியாயிற்று! திருக்குறள் பற்றிய வழி வழி வரும் சில கர்ண கதைகளை முழுமையாக நம்புகிறார்கள். நம்புவதோடு மட்டும் இல்லாமல் அதையே தங்களுக்கு ஆதரவாக குறிக்கவும் செய்கிறார்கள். இதில் சில விதிவிலக்கான அறிஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்றைய இணைய தமிழறிஞர்கள் கவனிக்க தவறும் சில கருத்துக்களை சிலவற்றை கீழே கொடுத்திருக்கிறேன்.
திருக்குறள் சமயம் பற்றி ஆராயும் வலைஞர்கள் கவனிக்க வேண்டியவை
1. திருக்குறள் சமயம் அதன் கடவுள் வாழ்த்தில் தான் ஆராய வேண்டும். திருக்குறளில் இந்திரனைப் பற்றி, தாமரைக் கண்ணான் பற்றி, அந்தணர் பற்றி, காமத்துப் பாலை பற்றி சொல்லியிருக்கிறது போன்ற வாதங்கள் ஆராய்ச்சிக்கு எடுபடாது.
2. திருக்குறள் கடவுள் வாழ்த்தில் வரும் குறிச்சொற்களான “ஆதிபகவன்”, ”வாலறிவன்”,
“அறவாழி அந்தணன்”, ”ஐந்தவித்தான்”, ”மலர்மிசை ஏகினான்”, “எண்குணத்தான்”, “வேண்டுதல் வேண்டாமையிலான்” போன்ற சொற்றொடர்களுக்கு இலக்கணம் காண முயன்றாலே குறளின் ஆசிரியர் சமயத்தை எளிதில் உள்ளலாம்.
3. கடவுள் வாழ்த்தில் வரும் குறிச் சொற்களைப் பற்றி நிகண்டுகள் என்ன சொல்கின்றன என்று பார்க்கலாம்.
4. திருக்குறள் நீதி நூல். அது ஒரு வாழ்வியல் நூலும் கூட. அதில் பலதரப் பட்ட செய்திகள் சொல்லப்பட்டிருக்கும். காட்டாக, ஒரு நாட்டின் மன்னன் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும் என்று கூறும் குறளில் (குறள்: 550)மரண தண்டனையைப் பற்றி கூறியிருக்கிறது அதனால், அது சமண நூலாகாது என்று துணிகிறார்கள். இக்குறளில் சமயத்தை ஏன் தேடுகிறார்கள்?
5. தமிழில் தோன்றிய நூற்களில் மிக சிறப்புடைத்து திருக்குறள். அக்குறளை ஏன் சைவத் திருமுறைகளில் ஒன்றாக வைக்கவில்லை என்ற தமிழ்த் தென்றல் திரு.வி.காவின் கேள்விக்கு இதுவரை யாரும் விடைக் கண்டதாகத் தெரியவில்லை. அவரின் கட்டுரையிது.
http://www.treasurehouseofagathiyar.net/37300/37332.htm
http://www.treasurehouseofagathiyar.net/37300/37357.htm
6. சமகால இலக்கியங்கள் குறளின் சமயத்தை ஆராய துணைபுரியும்.
சிவத்தமிழோன் அவரின் கட்டுரைக்கு என் மறுப்புரை
1. அவர்: //பகவன் எனும் சொல் சமணத்துடன் தொடர்பானதாயின் அது சமண நூல் ஆகிவிடுமா என்ன? இன்று வேதம்,வேதாகமம்,வீபூதித் திருநாள் என்பன கிருஷ்தவத்துள் புழக்கத்தில் இருப்பது கண்கூடு!//
என் பதில்: வேதம், வேதாகமம், வீபூதித் திருநாள் போன்ற சொல்லாடல்கள் இன்றைய கிருத்துவர்கள் உபயோகித்தாலும் அவை கிருத்துவ பதங்கள் இல்லை என்ற தங்கள் கருத்தை யான் ஆமோதிக்கிறேன். கிருத்துவ பைபிள் தமிழாக்கம் செய்தவர்கள் சைவத் பெருந்தகையர்கள் என்பதை தாங்கல் அறிவீர்கள் என்று நினைக்கிறேன்.
http://www.treasurehouseofagathiyar.net/27700/27752.htm
இன்று இச்சொற்களை கிருத்துவம் உபயோகித்தாலும் அவைகள் முதன்
முதலிலேயே சைவத் தமிழ் இலக்கியங்களில் விரவி வருவதைக் கொண்டு அவை கிருத்துவ சொற்றொடர்கள் அல்ல என்பதை எளிதில் உள்ளலாம். :-)
அவ்வாறே “ஆதிபகவன்” என்ற சொல்லாட்சி முதன் முதல் சமணத் தமிழ் இலக்கியங்களில் விரவி வந்து பின்னாளில் மற்ற சமயங்கள் எடுத்தாண்டன எனறு யான் சொன்னால் தாங்களும் ஆமோதிப்பீர்கள் என்று கருதுகிறேன். ;-)
2. அவர்: //சமண சமய அறிமுகத்தால் தமிழில் அச்சொல் புழக்கத்தில் இருந்தமையால் வள்ளுவர் பயன்படுத்தியிருக்க வாய்ப்புண்டல்லவா? ஏனெனில் சமணநூலே திருக்குறள் என்பதற்கு எந்தவித சிந்தனையும் இன்றி இதையே சுட்டுகின்றனர்.//
என் பதில்: அதைத்தான் யானும் கேட்கிறேன். குறளின் கடவுள் அதிகாரத்தில் உள்ள சொற்றொடர்களை ஏன் சைவம் பொன்னேப் போல் எடுத்தாளவில்லை? மாறாக, அவைகள் சமண இலக்கியங்களில் விரவி வருகின்றனவே! ஏன் வரவில்லை என்றால், அவைகள் சமணத் சொற்றொடர்கள்! ஆகையால், சைவ இலக்கியங்களில் விரவி வரவில்லை. என்னை?
3. அவர்: //திருக்குறளுக்கு சமண நூல் எனும் மாயை சூட்டியவர்கள் மறுபிறப்புக் கொள்கையை மறந்துபோனது ஏனென்று விளங்கவே இல்லை.//
யான்: தாங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் என்று புரியவில்லை. சமணத்தில் “மறுபிறப்பு” இல்லை என்று சொல்ல வருகிறீர்களா? மறுபிறப்பில்லை என்றால் ஊழ் இல்லை, சமணக் கோட்பாடே தோன்றியிருக்காது! :-)
4. அவர்: //எண் குணத்தான் என கடவுளை திருக்குறள் கூறுகின்றது.//
யான்: ஆம் கூறுகிறது! தமிழில் தோன்றிய நிகண்டுகளைப் பார்க்கவும். “எண்குணத்தான்” அருகக் கடவுளுக்கே உரியவை என்று அவைகள் பகரும். சிவபிரானுக்கு எண்குணத்தான் என்று யாண்டும் சொல்லப்படவில்லை.
5. அவர்: //சமண, பௌத்தப் புலவர்கள் திருவள்ளுவரையோ அன்றி
திருக்குறளையோ போற்றிப் புகழ்ந்ததாக இட்டுக்கட்டிக்கூட காட்டமுடியாது.//
யான்: :-) என்ன ஒரு மறுக்க முடியாத ஆதாரம். தங்களுக்கு சமணத் தமிழ் இலக்கியங்களில் பயிற்சி இல்லை என்பதைத் தான் தங்களின் கூற்று தெரிவிக்கிறது. சொல்ல போனால் நான் கேட்டிருக்கவேண்டிய கேள்வியிது. ;-) சமணர்கள் குறளைத் தங்கள் வேதமாகக் கூறியிருக்கிறார்கள். ”எம் ஒத்து”, என்றும் ”தேவர் உரைப்ப தெளிந்தேன்” (காலத்தால் முந்திய ஆதாரம்) என்றும் கூறியிருக்கிறார்கள். மற்ற சமயத்தவர் அவ்வாறு கூறியதாக யான் படித்ததில்லை. அவ்வாறு வரும்மின், சுட்டவும். திருத்திக் கொள்கிறேன் ஐயா!
6. அவர்: //பொதுநூலாக எழுத வெளிக்கிட்டபிறகு சிவன் எனும் பெயரை தவிர்த்திருப்பார் வள்ளுவர்.//
யான்: ஆமாம். தாங்கள் சொல்வது சரிதான். ”சிவ” என்ற சொல்லாட்சி முதன் முதல் பயின்று வரும் இலக்கியம் “சிலப்பதிகாரம்”. அந்த சொல்லாட்சியும் ‘அருகப்பதவியைச் சுட்ட” “சிவகதி நாயகன்” என்று இளங்கோவடிகள் கூறியிருக்கிறார். ”பிறவாயாக்கை பெரியோன்” என்று
தான் சிவனும் போற்றப்படுகிறாரே தவிர “சிவனுக்கு” சிவன் என்று பயின்று வரவில்லை. :-)
7. அவர்: //எனவே உள்ளீடு இல்லாத சமயங்களின் உரைகளை அச்சமயங்களின் நூல்களை படித்து கேட்டு காலத்தை வீணாக்குவது தவறு என்கின்ற சைவ சித்தாந்த மரபில் திருக்குறளை எடுத்துக்காட்டுகளாக நேரடியாக பயன்படுத்தியிருப்பதில் இருந்து திருக்குறள் சமணநூல் அல்ல என்பதும் சைவநூலே என்பதும் தெளிவாகிறது.//
யான்: 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ பெரிந்தகையான சிவாமிநாத தேசிகர் எழுதிய “இலக்கணக் கொத்து” என்ற நூலைப் படித்திருக்கிறீர்களா?
http://www.treasurehouseofagathiyar.net/27900/27989.htm
8. அவர்: //சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் கூட சைவநெறியைச் சார்ந்தவரே என்ற கருத்து வலிமைபெற்றுள்ளது. சிலப்பதிகாரத்தில் காணப்படுகின்ற சமயசார்பற்ற தன்மை கொண்டு இதை உறுதிசெய்வர்.//
யான்: அப்படியா? சிலப்பதிகாரம் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இளங்கோவடிகள் சைவப் புலவர் எனின், அருகருக்கு ஏன் குறளின் கடவுள் வாழ்த்தில் வரும் குறிச்சொற்களைப் வைத்துப் போற்றிப் புகழ்ந்துப் பாடியிருக்கிறார்? :-)
9. அவர்: //திருக்குறள் ஏனைய சமயங்களுக்கு ஒவ்வாத கருத்துகளைக் கொண்டது என்பதையும் சைவ சித்தாந்த நூலே என்பதையும் திருக்குறளை ஆராய்வுசெய்து வாலையானந்த அடிகள் 1926- 27களில் வெளிவந்த செந்தமிழ்ச் செல்வி பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் தொகுத்து நூலாக வெளியிட்டிருந்த திருவள்ளுவர் சித்தாந்த சைவர் என்னும் நூல் மெய்கண்டதேவரின் குருபூசையன்று மறுபதிப்பாக வெளியிடப்பட்டிருந்தது.//
யான்: திருக்குறள் சமண நூலே! சமண தமிழ் நூட்களை பின்னாளில் மாற்ற முயன்ற வரலாறு தமிழ் அறிஞர்கள் நன்கறிவார்கள்.
வாழிய நல்லறம்! வளர்க திருவறம்!!
இரா.பானுகுமார், (இரா.பா)
சென்னை.